ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டம்; ஆளும் கட்சி நிர்வாகிகள் தலையீட்டால் புலம்பும் தலைவர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதில் ஏமாற்றப்படுவதாக பயனாளிகளும், நெருக்கடியால் ஊராட்சி தலைவர்களும் புலம்புகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்ட பணிகளின் நிலவரம் குறித்து வாரம் தோறும், கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அரசு விதிகளின்படி வீடுகள் ஒதுக்காமல், சில ஒன்றியங்களில் பாரபட்சமாக வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

முறையாக வழங்க வேண்டும் என்றால், கிராம சபை கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும், கூரை வீட்டில் வசிக்கும், உரிய பட்டா இடமுள்ள ஏழை குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

ஆனால், ஊராட்சி தலைவர்கள் கோட்டா என எங்களுக்கு 2 வீடுகளை வழங்கி விட்டு, ஆளும் கட்சி பிரமுகர்கள் தான் வீடுகளை ஒதுக்குகின்றனர். எங்களுக்கு அவர்கள் வழங்கும் 2 வீடுகளை நாங்கள் யாருக்கென்று ஒதுக்க முடியும் என ஊராட்சி தலைவர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கோலியனுார் ஒன்றியத்தில் 420 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. அதில், 105 வீடுகளை பிரித்து, விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், பயனாளிகள் வீடு கட்டாததால், மாற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சி வட்டாரத்தின் நெருக்கடியால் மாற்று ஒன்றியத்திற்கு வீடு போய் விட்டது என உள்ளூர் ஆளும் கட்சி தரப்பினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கோலியனுார் ஒன்றியத்தில் ஏராளமானோர் வீடுகள் கேட்டு மனு கொடுத்து காத்திருக்கின்றனர். ஆனால், மாற்று ஒன்றியத்திற்கு வீடுகளை பறித்துச்செல்வது நியாயமில்லை என புலம்புகின்றனர். இதே போன்று ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பிரச்னை இருப்பதால் உயரதிகாரிகள் தலையிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement