கோர்ட்டில் குட்டு வாங்கியும் திருந்தாத அதிகாரிகள்: பேனர் கலாசாரத்திற்கு விடிவுகாலம் தான் எப்போது?

புதுச்சேரி: இ.சி.ஆரில் 3 கி.மீ., தொலைவிற்கு சட்ட விரோதமாக வைத்துள்ள பேனர்களை அகற்றாமல், வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் கலெக்டர் உள்ளிட்ட 13 துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும் என புதுச்சேரி நீதிமன்றம் எச்சரித்தது.

இதனால், சற்று அடங்கியிருந்த பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கி பேயாட்டம் ஆடத்துவங்கியுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும் பேனர்கள், நிகழ்ச்சி முடிந்தாலும் அகற்றுவதில்லை.

உச்சக்கட்டமாக நேற்று இ.சி.ஆரில் பிள்ளைச்சாவடி முதல் கனகசெட்டிக்குளம் வரை 3 கி.மீ., துாரத்திற்கு கோவில் கும்பாபிேஷகம், கல்யாணம் என சாலையின் இருபுறமும் மட்டுமன்றி, சென்டர் மீடியன், மின்கம்பங்களிலும் பேனர்களை வைத்துள்ளனர். இதேநிலை புதுச்சேரி காமராஜர் நகர், 45 அடி சாலை உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் இருந்தது.

போக்குவரத்திற்கு பாதிப்பையும், விபத்தையும் ஏற்படுத்தக்கூடிய இந்த பேனர்களை அகற்றாமல், அதிகாரிகள் கண்ணை மூடிக் கொண்டு அலட்சியமாக செல்வது மக்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் அதிரடி ஆக் ஷனை மாவட்ட நிர்வாகத்திடமும், சாலை பாதுகாப்பு குழுவிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். என்ன செய்ய போகிறார் கலெக்டர் குலோத்துங்கன்.

@block_B@

தனி நாடா வில்லியனுார்?

வில்லியனுாரில் உச்சகட்டமாக மின்கம்பங்களையும் விட்டு வைக்காமல் பள்ளி, கல்லுாரி, துணிக்கடை, ரியல் எஸ்டேட் விளம்பர தட்டிகளை கட்டியுள்ளனர். இதற்கு, யார் அனுமதி கொடுத்தது. இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோன்று சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்றாமல், கொம்யூன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.மாநிலத்தில் அமலில் உள்ள பேனர் தடை சட்டம், வில்லியனுாருக்கு பொருந்தாதா? வில்லியனுார் என்ன தனி நாடா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.block_B

@block_B@

உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமா?

பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாத அதிகாரிகள் யார் கூறினால், நடவடிக்கை எடுப்பார்கள். சாதாரன பேனர் விவகாரத்திற்கும் சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தால் கலெக்டர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் போய் நின்று வந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.block_B

Advertisement