ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

8

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில், உள்ள மண்டியில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கடந்த 20ம் தேதி பருவமழை துவங்கியதில் இருந்து, ஹிமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்யும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது.



சாலைகள் சேதம்

மண்டி, சிம்லா, சிர்மாவுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன; சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்த சூழ்நிலையில் மண்டியில் உள்ள, சியாத்தி கிராமத்தில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்துள்ளது. எனவே உரிமையாளர் வந்து பார்க்க, சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வந்துள்ளது. பதறிய அவர், மொத்த கிராமத்தினரையும் அலர்ட் செய்ய, அவர்கள் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுள்ளனர்.



உயிர் பிழைத்த 67 பேர்!

அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்துள்ளன. நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நாய் சரியான நேரத்தில் குரைத்ததால், 67 பேர் உயிர் பிழைக்க முடிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



நாய் குரைத்ததால் விழித்தேன்...!

இது குறித்து, சியாதி கிராமத்தை சேர்ந்த நாய் உரிமையாளர் நரேந்திரா கூறியதாவது: தனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென சத்தமாக குரைக்கத் தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் ஊளையிட்டது, மழை தொடர்ந்து பெய்தது.


குரைக்கும் சத்தத்தை கேட்டு நான் விழித்தேன். வீட்டின் சுவரில் ஒரு பெரிய விரிசலைக் கண்டேன், தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. நான் நாயுடன் கீழே ஓடி அனைவரையும் எழுப்பினேன்.


நாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றோம். தற்போது கிராமத்தில் ஐந்து வீடுகளைத் தவிர அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உயிர் பிழைத்தவர்கள் கிராமத்தில் உள்ள தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement