அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு எப்போது?

ராமேஸ்வரம் : மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பது எப்போது என ரயில் பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.

ராமேஸ்வரம் கோவில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைத்த பின் மதுரையிலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த ரயில் தற்போது மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.

ராமேஸ்வரத்திற்கு நீட்டித்தால் ராமநாதசுவாமி, பழனி முருகன், பொள்ளாச்சி மாசாணி அம்மன், திருச்சூர் அருகே குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா பயணியர் ராமேஸ்வரம், திருவனந்தபுரம் செல்லவும் வசதியாக இருக்கும்.

ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவக்கி 3 மாதம் ஆன நிலையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ராமேஸ்வரம் சேவா பாரதி தலைவர் சுடலை கூறுகையில், “ராமேஸ்வரம் முதல் திருவனந்தபுரம் வரை ஆன்மிகம், சுற்றுலா நிறைந்த பகுதிகள் ஆகும். எனவே ராமேஸ்வரம் வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க ரயில்வே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Advertisement