சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி

6

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 217 பேர் கடும் அவதி அடைந்தனர்.


சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் 217 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு திடீரென தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.


கடைசி நேரத்தில் தொழில் நுட்பக் கோளாறு விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி பழுதை நிபுணர்கள் சரி செய்தனர்.
பழுதுபார்க்கும் பணியின் போது 217 பயணிகளும் விமானத்திற்குள் அமர்ந்திருந்தனர். இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.


இதனால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். பின்னர் விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக காலை 11.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. அண்மை காலங்களாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement