உடைமாற்றும் காட்சியை படம் பிடித்ததால் ஆத்திரம் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய கொடூரம் பவன்கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது

சென்னை:ஆந்திராவில், பவன் கல்யாண் கட்சியின் பெண் நிர்வாகி, படுக்கை அறையில் உடைமாற்றும் காட்சியை படம் பிடித்த உதவியாளரை, கொலை செய்து சென்னையில் கூவம் ஆற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகி உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு, 22; இவர், ரேணிகுண்டாவைச் சேர்ந்த நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளரான வினுதா கோட்டா, 31, என்பவரிடம், கார் ஓட்டுநராக 2019ல் இருந்து பணிபுரிந்து வந்தார்.
சென்னை கூவம் ஆற்றில் ஸ்ரீனிவாசலு சடலம், கடந்த 8ம் தேதி மிதந்தது. அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததற்கான காயம் இருந்தது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர், சடலத்தை இழுத்து வந்து, கூவம் ஆற்றில் வீசி செல்வது தெரிந்தது. இதையடுத்து, அந்த நபர் வந்த காரின் வாகன எண்ணை வைத்து, விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்த கொலையில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது. ஜனசேனா கட்சி ஐ.டி., பிரிவு நிர்வாகியான திருப்பதி, காளஹஸ்தி மாவட்ட பெண் தலைவர் வினுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, திருப்பதியைச் சேர்ந்த உதவியாளர் கோபி, 24, கார் ஓட்டுநர் ஷேக்தாசன், 28, ஆகிய ஐந்து பேரரையும் திருப்பதியில் போலீசார் கைது செய்து, சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர்.
இக்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது: வினுதா கோட்டா வீட்டில் சீனிவாசலு, 2019 முதல், தங்கி வேலை செய்து வந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ., பஜாலா சுதீர் ரெட்டியின் விசுவாசிதான் ஸ்ரீனிவாசலு. பஜாலா சுதீர் கூறியதற்காக, வினுதா கோட்டா வீட்டிற்கு வேவு பார்க்கும் வேலைக்கு சென்றுள்ளார். மேலும் வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்களை, அலைபேசியில் எடுத்து, அவருக்கு அனுப்பி வந்துள்ளார்.
மார்ச் மாதம் வினுதா கோட்டா உடைமாற்றுவதை அலைபேசியில் ஸ்ரீனிவாசலு படம்பிடித்துள்ளார். இதை பார்த்த வீட்டில் இருந்தோர் ஸ்ரீனிவாசலுவை தாக்கினர். பஜாலா சுதீர் ரெட்டியின் அறிவுறுத்தல்படி இவ்வாறு செய்ததாக, அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, வினுதா கோட்டா, தன் கட்சி தலைமையிடம் புகார் அளித்தார். கட்சி தலைமை ஸ்ரீனிவாசலுவை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
எனினும் வினுதா கோட்டாவும், அவரது கணவர் சந்திரபாபுவும் ஸ்ரீனிவாசலுவை கடத்தி வந்து, தங்கள் வீட்டில் அடைத்து வைத்து நான்கு நாட்களாக சித்ரவதை செய்துள்ளனர். கடந்த 7ம் தேதி, ஸ்ரீனிவாசலுவை சந்திரபாபுவும், கார் ஓட்டுநர் ஷேக்தாசனும் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் இருவர், சிவகுமார் , கோபி ஆகியோர் சேர்ந்து, காரில் சடலத்தை ஏற்றி, சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். சென்னை ஏழுகிணறு கூவம் ஆற்றில் வீசியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.