டில்லி உஷ்ஷ்ஷ்: மாளிகைகளால் பா.ஜ.,விற்கு சிக்கல்!

புதுடில்லி: டில்லி மாநில முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், 'சொந்த தேவைக்காக, அரசு பணத்தில், 44 கோடி ரூபாய் செலவு செய்து, கண்ணாடி மாளிகை கட்டினார்' என, தீவிர பிரசாரம் செய்து அவரைத் தோற்கடித்து ஆட்சி அமைத்தது, பா.ஜ., ஆனால், இப்போது இதே விவகாரம் பா.ஜ.,வை தாக்கியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். இவருடைய அரசு பங்களா, 10 ஏக்கரில் உள்ளது. 60 அறைகள், பேட்மின்டன் கோர்ட், புல்வெளிகள், அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன், 2010-ல் கட்டப்பட்டது.
இங்கு பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாளிகையை, 'ஜல் மஹால்' என, எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், முதல்வர் அலுவலகமோ, 'இது புதிய கட்டுமானம் அல்ல; முதல்வர் இல்லத்தின் திட்ட அறிக்கையில், நீச்சல் குளம் ஏற்கனவே இருந்ததாகவும், இது நீர் சேமிப்பு மற்றும் பசுமை கட்டடக் கோட்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த பங்களா தொடர்பாக, இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. 'இங்கு வசித்த முதல்வர்கள் யாருமே தங்கள் பதவிக்காலம் முழுதும் பணியாற்ற முடியாமல், பாதியிலேயே பதவி இழந்துள்ளனர்; இது ஒரு ராசியில்லாத பங்களா' என, பேசப்படுகிறது.
இன்னொரு பக்கம், பா.ஜ.,வை சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் புதிய பங்களாவும் பிரச்னையில் சிக்கியுள்ளது. இவருக்கு இரண்டு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று அலுவலகமாகவும், மற்றொன்று வீடாகவும் இருக்கும்.
இங்கு, 60 லட்சம் ரூபாய்க்கு மேலாக பல 'டிவி'க்கள், 14 'ஏசி, 'பிரீமியம்' மின்சார சுவிட்சுகள் என, நவீனப்படுத்தும் திட்டம் துவங்கியது. உடனே, 'இது மாயா மஹால்' என, ஆம் ஆத்மி கட்சி வர்ணித்து விமர்சித்தது. இதனால், பா.ஜ., மேலிடம் மிகுந்த கோபத்தில், இந்த வேலையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகையைக் கிண்டல் செய்த பா.ஜ., இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறது.