கடினமாகவும், எளிமையாகவும் இருந்த குரூப் 4 தேர்வு தேர்வர்கள் சொல்கிறார்கள்

மதுரை: குரூப் 4 தேர்வில் தமிழ், பொது அறிவு வினாக்கள் எளிமையாக இருந்ததாக மதுரை மாவட்ட மையங்களில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 3935 காலிப் பணியிடங்களுக்கு நேற்று டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் 4 தேர்வு நடந்தது. மதுரையில் 265 மையங்களில் 73 ஆயிரத்து 809 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

61 ஆயிரத்து 442 (83 சதவீதம்) பேர் தேர்வு எழுதினர். 12 ஆயிரத்து 367 (17 சதவீதம்) பேர் பங்கேற்கவில்லை. மதுரை, திருநகர், திருமங்கலத்தில் சில தேர்வு மையங்களை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.

தேர்வில் பங்கேற்ற சிலர் கடினம், எளிமை, நீண்ட வினாக்களை புரிந்து பதிலளிக்க இன்னும் கூடுதல் நேரம் தேவை என மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழ் எளிது



முத்துச்செல்வி, புதுார்: பிளஸ் 2 படித்துள்ளேன். தற்போது 3வது முறையாக குரூப் 4 தேர்வு எழுதியுள்ளேன். பொது அறிவு, அரசியல் சாசன சட்டம் கேள்விகள் கடினமாக இருந்தன. தமிழ் பாட கேள்விகள் எளிதாக இருந்தன.

முதல் முயற்சி



ஞானபிரசாந்த், விளாங்குடி: பி.இ., 3வது ஆண்டு படிக்கிறேன். முதன்முறையாக குரூப் 4 தேர்வு எழுதியுள்ளேன். கணிதம், பொது அறிவு வினாக்கள் எளிதாக இருந்தன. கடந்த முறை நடந்த இத்தேர்வு வினாக்களை ஒப்பிடுகையில் இம்முறை கடினமாக இருந்தது.

எளிய, அதிக வினாக்கள்



வாசுகி, அச்சம்பத்து: சித்த மருத்துவம் படித்துள்ளேன். குரூப் 4 தேர்வை தற்போது 2வது முறையாக எழுதியுள்ளேன். தமிழ், கணித வினாக்கள் எளிதாக இருந்தன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பாடங்களிலிருந்து அதிக வினாக்கள் இடம்பெற்றன.

'கட் ஆப்' அதிகரிக்கலாம்



தாரணி, பேரையூர்: பி.இ., படித்துஉள்ளேன். குரூப் 4 தேர்வை 2வது முறையாக எழுதியுள்ளேன். தமிழ் வினாக்கள் எளிதாக இருந்தன. இதில் நல்ல மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. பொது அறிவு வினாக்களுக்கு யோசித்து பதிலளிக்க வேண்டி இருந்தது. தமிழ், பொது அறிவு வினாக்கள் எளிதாக இருந்ததால் இம்முறை 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.

இவ்வாறு கூறினர்.

Advertisement