ஜூலை 30 வரை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

பழவேரி:பழவேரி சுற்றுவட்டார கிராமங்களில் மாடுகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஜூலை 1 ம் தேதி துவங்கிய, 7ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.69 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்தந்த பகுதி கால்நடை மருந்தகம் சார்பில் முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.

சிறுமையிலுார் கால்நடை மருந்தக மருத்துவர் விமல்ராஜ் தலைமையிலான குழுவினர், கால்நடை பராமரிப்போரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது,

கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு உட்பட்ட கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும்.

இந்த தடுப்பூசி மூலம் மாடுகளுக்கு குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதோடு உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும், மாடுகளுக்கான பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, எடை குறைவு போன்ற பாதிப்புகளில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement