பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது

2

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாடியவர்களை கண்டித்தவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 65, எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சில வாலிபர்கள் ரோட்டில் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடி கூச்சலிட்டனர். இதனை ரவிச்சந்திரன் கண்டித்தார். வாலிபர்கள் கேட்காததால் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் இடையூறு செய்தவர்களைக் கண்டித்து அனுப்பினர்.

அதிகாலை 1:00 மணியளவில் ரவிச்சந்திரன், குடும்பத்தினர் தூங்கிய போது அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சத்தம் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து வெளியே வந்த போது பெட்ரோல் குண்டு கிடப்பதை கண்டனர்.

ரவிச்சந்திரன் மீண்டும் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் முடப்பாலம் பகுதியைச்சேர்ந்த சுனில்ராஜ் 20, முகேஷ் 20, மூர்த்தி 20, முத்து 24 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement