ஆகாயத்தாமரை சூழ்ந்த குளம் மீஞ்சூர் நிர்வாகம் பாராமுகம்

பொன்னேரி:பெருமாள் கோவில் குளம் பராமரிப்பு இல்லாததால், ஆகாயத்தாமரை வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

மீஞ்சூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கரியமாணிக்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குளத்தில் தேங்கும் தண்ணீர் நிலத்தடிநீர் பாதுகாப்பிற்கும், கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது.

இந்நிலையில், இக்கோவில் குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கிராமவாசிகள் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, கோவில் குளத்தை சீரமைத்து தரவேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:

நீர்நிலைகளை உரிய முறையில் பராமரித்தால், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது.

மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்துவிட்டோம். ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், குளத்தை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement