'சார்ஜிங்' மையத்தில் புகுந்த கார் மோதி சிறுவன் பலி

மூணாறு,: கேரளா இடுக்கி மாவட்டம் வாகமண் அருகே 'சார்ஜிங்' மையத்தில் புகுந்த கார் மோதி, தாயின் மடியில் துாங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பலியானான்.

கேரளா திருவனந்தபுரம் அருகே நேமம் பகுதியைச் சேர்ந்த சபரிநாத், விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மனைவி ஆர்யா, மகன் அயான்ஸ்நாத், ஆகியோருடன் வாகமண்ணுக்கு எலக்ட்ரிக் காரில் சுற்றுலா வந்தார். அப்போது காரில் சார்ஜ் மிகவும் குறைவாக இருந்ததால் ஈராட்டுபேட்டை, வாகமண் ரோட்டில் வழிக்கடவு ஜங்ஷனில் உள்ள மையத்தில் காருக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அங்குள்ள இருக்கையில் ஆர்யா அமர்ந்து இருந்த நிலையில், அவரது மடியில் படுத்து சிறுவன் அயான்ஸ்நாத் துாங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சார்ஜிங் மையத்திற்குள் புகுந்து ஆர்யா மீது மோதியது. அதில் ஆர்யா, அயான்ஸ்நாத் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதி மருத்துவமனையில் அயான்ஸ் நாத்தை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆர்யா சிகிச்சை பெறுகிறார்.

போலீசார் விசாரணையில் இவர்கள் மீது எர்ணாகுளத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பயணித்த கார் மோதியது தெரிந்தது. பின் அதே வேகத்தில் நிற்காமல் முன்னோக்கி சென்றது. காரை பொது மக்களின் உதவியுடன் பின்நோக்கி நகர்த்தி தாய், மகன் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisement