மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சேலம்: மக்களின் மொபைல் எண்களை பெறுவதற்காக அரசு அதிகாரிகளை திமுக அரசு பயன்படுத்துகிறது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; சேலம் மாநகராட்சியின் குறைபாடுகளை வெளிப்படுத்திய அ.தி.மு.க., கவுன்சிலரை திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்களின் பிரச்னைகளை பற்றி பேசுவதற்காகத் தான் மாமன்றம். அங்கு கூட பேசக் கூடாது என்று அராஜகத்தையும், ரவுடிசியத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இது பற்றி போலீஸில் புகார் அளித்தால், அடிபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்வது தான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சட்டம் ஒழுங்கு என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
எங்களின் சுற்றுப்பயணத்தை தான் நீங்க தான் ஊடகங்களில் காட்ட மாட்டுகிறீர்களே.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்து விட்டார்கள். எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. எனவே, மக்கள் எழுச்சியுடன் இருப்பது எங்களின் சுற்றுப்பயணத்தில் வெளிப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் வேடிக்கையாக இருக்கிறது. விளம்பரம் செய்ய வேண்டும், மக்களை கவர்ச்சிகரமாக இழுக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலுக்காக இந்த திட்டத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். அப்புறம் ஏன் இந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கான பணிகளை செய்யவில்லை. மக்களை பற்றி சிந்திக்காமல், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலுக்காக, உங்களுக்கு குறை இருந்தால் சொல்லுங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதில், தொலைபேசி எண்ணை குறிக்க சொல்கிறார்கள். அந்த நம்பர் தி.மு.க., ஐ.டி.,விங்கிற்கு போகும். அவர்கள் மக்களை தொடர்பு கொள்வார்கள்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று கோரிக்கை மனுக்களை வாங்கினார். அந்த மனுக்களை தீர்த்து வைத்தால், இப்போது எப்படி பிரச்னை இருக்கும். எல்லாம் ஒரு நாடகம். மக்களின் தொலைபேசி எண்களை பெறுவதற்காகவே, அரசு அதிகாரிகளை தி.மு.க., பயன்படுத்துகிறது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. தேர்தல் நேரத்தில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வந்து சேர வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைக்கும்.
அ.தி.மு.க., ஆட்சியமைந்த பிறகு, தி.மு.க., ஆட்சியில் எந்ததெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்ததோ, அது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும், இவ்வாறு கூறினார்.




மேலும்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
-
மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ரயில்வேயில் எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை; ராமதாஸ் குற்றச்சாட்டு
-
10 இடங்களில் வெயில் சதம்