கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு போலீஸ் கஸ்டடி கேட்டு மனு
கோவை; கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 28 ஆண்டுக்கு பின், கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில், 1998, பிப்.,14ல், பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 58 பேர் பலியாயினர். 231 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, அல்-உம்மா தலைவர் பாஷா, அன்சாரி உள்ளிட்ட, 156 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 42 பேருக்கு ஆயுள் சிறை, 106 பேருக்கு, ஏழு ஆண்டுக்கு மேற்பட்ட சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
ஆயுள்சிறை விதிக்கப்பட்ட பாஷா, 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்து வந்த டெய்லர் ராஜாவை,51,தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, கடந்த 11ம் தேதி கோவை ஜே.எம்., 5, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டெய்லர் ராஜாவை, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.