பணம் பறிக்கும் கும்பல் உலா பஸ் நிலையத்தில் பயணிகள் அச்சம்

கள்ளக்குறிச்சி பஸ் நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பணம், மொபைல் போன் உள்ளிட்டவைகளை பறித்துச் செல்லும் ஆசாமிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் எப்போது பார்த்தாலும் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

சமீப காலமாக பஸ் நிலையத்திற்கு வருவோரை சில நேரங்களில் மிரட்டி பணம், மொபைல் போன் போன்றவற்றை பறித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் வெளியூர் பயணிகள் அசதியில் பஸ் நிலையத்தில் துாங்குகின்றனர்.

அதேபோல் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அவ்வப்போது விழுந்து கிடக்கின்றனர். இதனை பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் ஆசாமிகள் சிலர் நோட்டமிட்டு துாக்க அசதி மற்றும் மதுபோதையில் இருப்பவர்களிடம் பணம், மொபைல் போனை அபகரித்து செல்கின்றனர்.

இதனைப் பார்த்து பொதுமக்கள் கேட்டால் அவர்களை மிரட்டுகின்றனர். இரவு நேரங்களில் அநாவசியமாக சுற்றித் திரியும் மர்ம ஆசாமிகளால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இதுபோன்று, பஸ் நிலையத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பயணிகள் போலீசில் புகார் அளிக்க யாரும் முன்வராததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, இதுபோன்ற சம்பவத்தில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபடுகிறது.

எனவே, போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு பணம் பறிக்கும் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement