பிறப்பு சான்றிதழ் வழங்காவிட்டால் போராட்டம் நடத்த காங்., முடிவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் அலட்சியத்தால், மாநிலம் முழுதும் எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த ஒரு வாரமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதியப்படாமலும், வழங்கப்படாமலும் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாணவர்கள் மேற்படிப்பு, பாஸ்போர்ட் வாங்குவது போன்ற காரணங்களுக்காக அவசியம் தேவைப்படும் பிறப்பு சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதன்மூலம் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அலைக்கழிப்பு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித் துறையின் பொறுப்பற்ற செயலால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, சரி செய்ய வேண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement