சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு

சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்டத்திற்கு நாளை (16ம் தேதி) வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, நாளை 16ம் தேதி கடலுார் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதை முன்னிட்டு, 15ம் தேதி கடலுார் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சிதம்பரம் பஸ் நிலையம் அருகிலுள்ள சாரதா ராம் ஹோட்டல் அரங்கில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளின் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் தெற்கு ரத வீதியில் இருந்து ரோட் ஷோ நிகழ்ச்சியில் பொதுமக்களை சந்திக்கிறார்.

மாலை 4:00 மணிக்கு மேலவீதி பெரியார் சிலை அருகே பேசுகிறார். இரவு 7:00 மணிக்கு, காட்டுமன்னார்கோவில் கடைத்தெருவில் நடக்கும் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பஸ் நிலையம் அருகே சிறப்புரையாற்றுகிறார்.

17ம் தேதி காலை சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள பொன்மணி அரங்கத்தில் கடலுார் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் நடக்கும் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 3:00 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு அம்மாபேட்டை, வல்லம்படுகை வழியாக சீர்காழி சட்டசபை தொகுதிக்கு செல்கிறார்.

பொதுச்செயலாளர் நிகழ்ச்சிகளில் கடலுார் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பான வரவேற்பை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement