உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

1

டேராடூன்: உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.



உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள பாலத்தில் 13 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பொலேரோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.


மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


பொலேரோ ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விபத்திற்கு காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், காயமடைந்த அனைவருக்கும் சரியான நேரத்தில், இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement