சிராஜ் 'அவுட்' தருணம் எப்படி இருந்தது... * இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேள்வி

லண்டன்: ''சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. இது எப்படி இருந்தது,'' என சுப்மன் கில்லிடம் இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸ் கேட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. தவிர இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள், இந்திய அணி வீராங்கனைகள், நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்து பேசினர். பிரிட்டனுக்கான இந்திய துாதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா உடன் இருந்தனர்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியது:
மன்னர் சார்லசை சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம்,'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது,' என கேட்டார்.
இதற்கு,'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்,' என்றோம்.
மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது, உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான்.
போட்டி 5 வது நாள் கடைசி வரை சென்று, 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின் இந்திய அணி வீரர்கள், நான்காவது டெஸ்ட் (ஜூலை 23-27) நடக்கவுள்ள மான்செஸ்டருக்கு கிளம்பிச் சென்றனர்.

Advertisement