கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அரவக்குறிச்சி, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 123வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா, அரவக்குறிச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.


தலைமை ஆசிரியர் முத்தையா விழாவை துவக்கி வைத்தார். பள்ளி அளவில் காமராஜர் பற்றிய பல்வேறு தலைப்புகளில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கவிதை போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவியரில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜி.ஆர் மனோகரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி மருதபாண்டியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சகிலா தேவி ஒருங்கிணைத்து வழங்கினார். தமிழாசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
* பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் தாஜுதீன் வரவேற்றார். மாணவர்கள் முஹம்மது நிப்ராஸ், சாஹா முஹம்மது வபஹத், அபூபக்கர் சித்திக், எஸ்.முஹம்மது ரில்வான், கே.எஸ். முஹம்மது ரில்வான் ஆகியோர் பேச்சு, கவிதை, பாடல்கள் மூலமாக காமராஜரின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். தமிழாசிரியர் முகைதீன் பிச்சை வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய மன்ற அமைப்பாளர் சையது இப்ராஹிம் நன்றி கூறினார்.
* லாலாப்பேட்டை காந்திசிலை அருகில், காங்., சார்பில் காமராஜ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில ஓ.பி.சி., அணி செயலாளர் தட்சணாமூர்த்தி, விவசாய அணி நிர்வாகி கிருஷ்ணன், மகாதானபுரம் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement