அஜித்குமார் கொலை: சி.பி.ஐ., 2 வது நாளாக விசாரணை

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, கொலை வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் 2வது நாளாக திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர் மடப்புரம் கோயில், உதவி ஆணையர் அலுவலகம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு இரு சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடந்தது. ஆக., 20க்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் சி.பி.ஐ., குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசார் காவல் நீடிப்பு



அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கண்ணன் 47, ராஜா 36, ஆனந்த் 38, சங்கரமணிகண்டன் 36, பிரபு 42, ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

15 நாள் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து நேற்று காணொலி காட்சி மூலம் திருப்புவனம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


@block_B@

அலைபேசி வீடியோ வைரல்




மடப்புரம் கோயிலுக்கு வந்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா நகைகள் திருடு போனதாக அளித்த புகாரின்பேரில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். ஜூன் 28 விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். ஜூன் 29ல் உடலை வாங்க மறுத்து மடப்புரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அரசியல் கட்சியினர், போலீசார், அஜித்குமார் உறவினர்களுடன் திருமண மஹாலின் கதவுகளை மூடி விட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியாக அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பழையனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் ஒருவர் ஜன்னல் கதவை மூடியுள்ளார்.


திருமண மஹாலை சுற்றியிருந்த பொதுமக்கள் ஜன்னல் கதவை உடைத்ததுடன் சமாதான பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., விசாரணை தொடங்கிய நிலையில் சமாதானப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் தற்போது அலைபேசி பதிவுகளை கசிய விட்டுள்ளது தெரிய வந்துள்ளது.block_B

Advertisement