அரசு ஐ.டி.ஐ., மாணவர் மர்மமான முறையில் கொலை

சிலைமான்:மதுரை மாவட்டம், ஒத்தக்கடை சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரசன்னா, 17. புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்தார். நேற்று முன்தினம் மாலை, இளமனுார் கண்மாய் கரையில் பாதி எரிந்த நிலையில், இவரது உடல் கிடந்தது.

தகவலின்படி, சிலைமான் போலீசார் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல ஐ.டி.ஐ.,க்கு சென்ற இவர், இளமனுாரில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வயதை சேர்ந்த, நான்கு பேருடன் கண்மாய் பகுதிக்கு அவர் வந்ததை, அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.

மாணவர் பிரசன்னா உடல் அருகே, ஐ.டி.ஐ., சீருடையின் சட்டை இருந்தது. அதன் காலர் பகுதியில் இருந்த டெய்லர் கடை பெயரை வைத்து, ஒத்தக்கடை டெய்லரிடம் போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில் பிரசன்னா தான் இறந்திருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.

அதுபோல, எரித்து கொலை செய்யப்பட்டது பிரசன்னா தான் என்பதை, அவரது குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.பின், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, அரசு மருத்துவமனை முன், அவர்கள் மறியல் செய்தனர்; போலீசார் கலைத்தனர்.

Advertisement