விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

திண்டிவனத்தில் துவங்கி, உளுந்துார்பேட்டை டோல்கேட் வரையிலான சாலையோர மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னை -திருச்சி நான்கு வழிச்சாலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தினால், சாதாரண நாட்களிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தமிழகத்தில், சாலை விபத்துகள் அபாயம் உள்ள முக்கியமான 10 இடங்களை, அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடாக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இப்பகுதியில், சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், சாலையின் இருபுறமும் மரக்கிளைகள் ஆக்கிரமிப்பு செய்ததால், சாலை தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து திண்டிவனம் முதல் உளுந்துார்பேட்டை டோல்கேட் வரையிலான சாலையோர ஆக்கிரமிப்பு மரக்கிளைகள் வெட்டி அகற்ற பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம், சாலையோர மரக்கிளைகள் அகற்றும் பணிகள் துவங்கியது, தற்போது, விழுப்புரம் பைபாஸ் சாலையில் திருவாமாத்துார், கொட்டப்பாக்கத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில், மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



- நமது நிருபர் -

Advertisement