ப.பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை


பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழை நீர் ஆறாக சென்றது. காவிரி சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
பள்ளிப்பாளைம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. அரைமணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல தேங்கியது.
இதனால் இந்த சுரங்கப்பாதை வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக்கு சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததால், பலரும் மாற்று வழியில் சென்றனர்.
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருப்பது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து, மோட்டார் மூலம் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது.
மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டாரை சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement