சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குழுவிற்கு பாராட்டு

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதன் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா, 32. இவருக்கு ஒரு சிறுநீரகம் செயல் இழந்த நிலையில், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற இரு வாரங்களுக்கு முன் சேர்ந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ், உதவி கண்காணிப்பாளர்கள் ராஜசேகர், சுரேஷ் மேற்பார்வையில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் நீலமேகம் தலைமையிலான குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். சிவாவின் தாய் சரஸ்வதி சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். கடந்த 9ம் தேதி லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தை சிவாவிற்கு பொருத்தினர். மருத்துவமனையில் முதன் முறையாக நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்து முடித்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டு விழா நடந்தது. மருத்துவக் கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, மருத்துவர்கள் நீலமேகம், ராஜசேகர், பிரபு, ஜெயஸ்ரீ, ஆர்த்தி, பூமா, இளையராஜா, காவ்யா ஆகியோரை பாராட்டி, பேசினார்.

அறக்கட்டளை துணைத் தலைவர் ராதா ராமச்சந்திரன், கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement