சுவாமி வீதியுலா செல்ல எதிர்ப்பு திருக்கனுார் அருகே போலீஸ் குவிப்பு

திருக்கனுார் : கைக்கிலப்பட்டில் ஒரு பிரிவினர் பகுதியில் இருந்து, மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சுவாமி வீதியுலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது.

திருக்கனுார் அடுத்த கைகிலப்பட்டு கிராமத்தின் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் ஒரு பிரிவினர் பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, நேற்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சுவாமியை வீதியுலாவாக மற்றொரு பிரிவினர் குடியிருப்பு வழியாக கிராம எல்லைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து, சுவாமி வீதியுலாவை தடுத்து நிறுத்தியதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த வில்லியனுார் தாசில்தார் சேகர், எஸ்.பி., வம்சிதர ரெட்டி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஒரு பிரிவினர் சுவாமி வீதியுலா பொது வழியாக கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மற்றொரு பிரிவினர் எங்களது குடியிருப்பு வழியாக விட்ட மாட்டோம் என, உறுதியாக தெரிவித்தார். இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement