உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரிஷிவந்தியத்தில் கலெக்டர் துவக்கி வைப்பு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார்.

ரிஷிவந்தியத்தில் நடந்த முகாமிற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது; பொதுமக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். முகாமில் ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகள் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறுவதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுவுடன் உரிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என கூறினார்.

தொடர்ந்து, புதிய மின் இணைப்பு வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுமதி, கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணை சேர்மன்கள் சென்னம்மாள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, நிர்வாகிகள் சிவமுருகன், ஷாயின்ஷா, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement