மதுரையில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை; இரு 'சீனியர்'கள் சரண்: இருவர் கைது

மதுரை : மதுரையில் ஐ.டி.ஐ., மாணவர் பிரசன்னாவை 17, எரித்துக்கொன்ற வழக்கில் இரு 'சீனியர்' மாணவர்கள் சரணடைந்தனர். 2 'சீனியர்கள்' கைது செய்யப்பட்டனர்.

மதுரைமாவட்டம் ஒத்தக்கடை சுதந்திராநகரைச்சேர்ந்தவர் பிரசன்னா. மதுரை புதுார் அரசு ஐ.டி.ஐ.,மாணவர்.ஜூலை 14மாலை சிலைமான் அருகே இளமனுார் கண்மாய்கரையில் எரிந்த நிலையில் இவரது உடல் கிடந்தது. அருகில் ரத்தக்கறையுடன் கல்கிடந்தது. சிலைமான் போலீசார் விசாரித்தனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி இருநாட்களாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இவ்வழக்கில் நேற்று மதுரை மகிழம்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ராமர் 18, மானகிரி அபினேஷ் 18, மதுரை ஜே.எம். கோர்ட் 2ல் சரணடைந்தனர். ஒத்தக்கடை தாமோதரன் 18, கருப்பாயூரணி அசோக்பாண்டியை 20, போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

ஐ.டி.ஐ.,யில் பிரசன்னாவுக்கு ராமர், அபினேஷ் உட்பட 4 பேரும் 'சீனியர்கள்'. சில நாட்களுக்கு முன் ராமரை சக மாணவர் ஒருவர் அடித்துள்ளார். இதற்கு பிரசன்னாதான் காரணம் என ராமர் சந்தேகப்பட்டு, ஜூலை 14ம் தேதி ஐ.டி.ஐ.,யில் இருந்து இளமனுாருக்கு அழைத்து வந்துள்ளார். உடன் நண்பர்களும் வந்துள்ளனர். 'நான் தாக்கப்பட்டதற்கு நீதான் காரணம்' எனக்கூறி தாக்கியதில் பிரசன்னாவின் பல் உடைந்துள்ளது.

அவர்களிடம் பிரசன்னா மன்னிப்பு கேட்டும் கல்லால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் கடந்த பனை ஓலைகளை சேகரித்து அரைகுறையாக எரித்துவிட்டு தப்பிச்சென்றனர். சரணடைந்த ராமர் உட்பட இருவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு விபரமும் தெரியவரும் என்றனர்.

Advertisement