நேர்மையான அதிகாரியை பழிவாங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

1

சென்னை: நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு, மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டி.எஸ்.பி.,யாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் சுந்தரேசன். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.

காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி.,சுந்தரேசனுக்கு அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் சங்கர் ஜிவால், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement