லாரி மோதி பள்ளி மாணவி காயம் மாங்காடில் பெற்றோர் மறியல்

குன்றத்துார், மாங்காடில், லாரி மோதி பள்ளி மாணவி காயமடைந்ததையடுத்து, மாணவ - மாணவியரின் பெற்றோர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்றத்துார் மாங்காடை சேர்ந்த பாபு மகள் ரக் ஷனா, 14. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பள்ளி அருகே, மண் ஏற்றி சென்ற லாரி, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மாணவி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை மாணவர்களை பள்ளியில் விட வந்த பெற்றோர், மாங்காடு - குன்றத்துார் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, பெற்றோர் கூறியதாவது:

பள்ளி அருகே, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இங்கு தோண்டப்படும் மண்ணை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு, வேகமாக செல்லும் லாரிகளால், மாணவ - மாணவியருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பள்ளி நேரத்தில், அப்பகுதியில் லாரிகள் செல்ல தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement