சாலை மறியல்: 450 ஆசிரியர் கைது

திருப்பூர்; தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம் நேற்றுமுதல் துவங்கியுள்ளது.

திருப்பூரில், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது. 'டிட்டோ ஜேக்' மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் பிரபு செபாஸ்டியன், ஜோசப், தங்கவேல் ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 450 பேர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, கடந்த 2006, ஜன., 1 தேதியிட்டு வழங்கவேண்டும்.

அண்ணாதுரை ஆட்சி காலம் முதல் வழங்கிய, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவேண்டும்.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பணி உயர்வின்போது, ஊதியத்தில் விதிக்கப்படும் தணிக்கை தடை விதிப்பதை தவிர்க்கவேண்டும் என, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் - திருப்பூர் ரோட்டில், அமர்ந்த ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அரசு பஸ் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்சென்று, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

Advertisement