மாடு மாலை தாண்டும் விழாவிற்கு மின் திருட்டு; அபராதம் விதிப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., அலங்காரிபட்டியில் பட்டவன் திருவிழா, கடந்த, நான்கு நாட்களாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான, மாடு மாலை தாண்டும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 14 மந்தைகளின் மாடுகளுடன், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், இந்த விழாவிற்கு உயரழுத்த மின் கம்பியில் இருந்து கொக்கி போட்டு, சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து, குளித்தலை கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மூன்று நாட்கள் மின்சாரம் பயன்படுத்தியதை கணக்கிட்டு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோல் ஈடுபட்டால், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement