தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்; எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

18

சென்னை: தமிழகத்தில் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.



பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 18) தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ., அரசின் வஞ்சகத்தை பார்லியில் எடுத்துரைத்து, தமிழகத்துக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.



* தமிழகத்தின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக பார்லி.,யில் தி.மு.க., எம்.பி.,க்கள் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம்.


* கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை பார்லியில் எடுத்துரைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


ஒருமித்த குரலாக.....!



இந்த எம்.பி.,க்கள் கூட்டம் குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும், எதிலும் ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள் மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும், தமிழகத்தின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement