எதற்கும் அஞ்சாத இரும்பு மனிதர் டி.வி.ராமசுப்பையர் முன்னாள் கவர்னர் தமிழிசை புகழாரம்
சென்னை: ''சமுதாய நலன் காக்கும் பணியில், எதற்கும் அஞ்சாத இரும்பு மனிதராக வலம் வந்தவர், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்,'' என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
மணிமேகலை பிரசுரம் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் அமரர் டி.வி.ராமசுப்பையரின், 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது. டி.வி.ஆர்., படத்திற்கு, மாலை அணிவித்து, தமிழிசை பேசியதாவது:
நான் பெற்ற பதவிகளை விட, குமரி அனந்தனின் மகள் என்பதில், எனக்கு கூடுதல் பெருமை உள்ளதாக குறிப்பிட்டனர்.
அரசியலில் அவர் பேச்சை கேட்காத மகளாக இருந்தாலும் அதை ஏற்கிறேன். ஒரு முறை என் தந்தையின் தொண்டையில் பிரச்னையாகி பேச முடியவில்லை.
அப்போது, காஞ்சி மகாபெரியவரை சந்தித்தார். அவர், தன்னிடம் இருந்த தாமரை மலரின் மகரந்தங்களை எடுத்து தந்தார். அதை வாயிலிட்டு சுவைத்ததும், என் தந்தையின் தொண்டை சரியானது. என்னை பொறுத்தவரை, தாமரையின் ஆசியால் தான், அப்பா மீண்டும் பேசினார்.
தாமரை சின்னம்
'தினமலர்' நாளிதழின் சின்னம் தாமரை; அதன் நிறுவனர் டி.வி.ஆரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் பெயர், கடல் தாமரை.
அதனால், அவரை பற்றி நான் பேசுவது தான் பொருத்தம். டி.வி.ஆரின் மகன் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஆட்சி பணியாளராக வேண்டும் என விரும்பிய போது, அவரை தடுத்து, 'பத்திரிகை துறையின் உதவியால், ஆட்சிப் பணியாளரை விட, அதிகமாக சமூகத்திற்காக உழைக்கலாம்; சாதிக்கலாம்' என்று, டி.வி.ஆர்., அறிவுறுத்தி உள்ளார்.
அவர், எந்த அளவுக்கு பத்திரிகை துறையை நேசித்தார் என்பதற்கு, இதுவே சான்று.
கடந்த, 1972ல், தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்ட போது, தமிழகத்திற்கு விடுதலை வேண்டும் எனக்கருதி, அவரை ஆதரித்தவர் டி.வி.ஆர்.
'கன்னியாகுமரிக்கு ரயில் வேண்டும்' என, பத்திரிகை வாயிலாக போராடியவர். முதல் ரயில், என் தந்தை எம்.பி.,யாக இருந்த போது வந்தது. அதில், அவர் பயணித்தார் என்பதில், டி.வி.ஆருடன் இணைந்த என் தந்தையின் வரலாறும் உள்ளது.
ஒன்றுபட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து, குமரி பிரிய வேண்டும் என்பதில், டி.வி.ஆர்., உறுதியாக இருந்தார். அந்த குமரியின் மகளாக, அவரை நினைவுகூர்வது பெருமையாக உள்ளது. 1972ல், தென்மாவட்டத்தில், ஒரு பேராசிரியரை போலீசார் சிறைச்சாலையில் வைத்து, அடித்து சித்திரவதை செய்தனர்.
தென் மாவட்ட மாணவர்கள் அனைவரும் அவருக்காகப் போராடினர். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, பேராசிரியர் மீது குற்றம் உள்ளது போல, தன் செய்தித்தாளில் எழுதினார்.
துணிந்து நின்றார்
அப்போது, களத்தில் நின்று, உண்மையை முதல் பக்கத்தில் எழுதி, மாணவர்கள் மற்றும் பேராசிரியர் பக்கம் நின்றது தினமலர் நாளிதழ்.
அப்போது, கே.டி.கோசல்ராம், பாளை சண்முகம் உள்ளிட்டோர், தி.மு.க.,வினர், 'தினமலர்' அலுவலகத்தை தாக்க வருவதாக தகவல் அளித்த போது, தன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, தன்னந்தனியாக அலுவலகத்தில் அமர்ந்து, குமரி மாவட்ட பிரிவினைக்காக தாக்கப்பட்டதை விட, தற்போது தாக்கப்பட்டால் மிகவும் சந்தோஷம் அடைவேன் என, அஞ்சாத இரும்பு மனிதராக, டி.வி.ஆர்., துணிந்து நின்றார்.
அரசியல்வாதிகளுக்கு, ஆறு அம்ச திட்டங்களை கூறி, அதை செயல்படுத்தும்படி கூறினார். தொகுதி பிரச்னைகளை, அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பத்திரிகை தர்மத்தை நிலைநாட்டினார்.
தற்போதுள்ள அரசியல்வாதிகள், கொடுப்பதை கொடுத்து, வாங்குவதை வாங்குவதால், ஐந்தாண்டுகளுக்கு தொகுதி பக்கமே தலைகாட்டுவதில்லை. இந்த நிலை மாற, ஊடகங்கள் உண்மையை விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, வடக்கில் திருத்தணியை இணைக்க பாடுபட்டவர் ம.பொ.சி.,. தெற்கே குமரியை இணைப்பதற்காகவே பத்திரிகையை துவக்கி, ஐந்தாறு ஆண்டுகள் பாடுபட்டவர் டி.வி.ஆர். அவர் பெயரில் மட்டும் தான் அய்யர்.
ஆனால், அவர் பாரதியை போன்ற புரட்சியாளர். அவரின் புரட்சி, குடுமியை வெட்டிக் கொள்வதில் இருந்து துவங்கியது.
அவர் செய்த மற்றொரு புரட்சி, எம்.ஜி.ஆரை ஆதரித்தது. அதனால், தமிழகத்தை மேம்படுத்தினார். அவர் தேசியத்தையும், தமிழையும் போற்றி பாதுகாத்தவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் பேசுகையில், ''தினமலர் நாளிதழ், நான்கு தலைமுறைகளை கடந்து, சமூகப் பங்காற்றுகிறது.
''பத்திரிகை துறையில், குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி., அண்ணாமலை போல, 'தினமலர்' ஆசிரியர் கி.ராமசுப்புவும், தன் முகம் காட்டாமல், வாசகர்களுடன் இணைந்து பழகுபவர். அதன் விளம்பர துாதராக இருப்பதில் மகிழ்ச்சி,'' என்றார்.
அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லைபாலு பேசுகையில், ''சமூகப்பணியில் தொடர்ந்து பங்களிக்கும் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆருக்கு, மத்திய அரசு, 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்,'' என்றார்.