'சீன அணை குறித்து கவலை வேண்டாம்'

குவஹாத்தி : “சீனாவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட அணை குறித்து உடனடி கவலை எதுவும் தேவையில்லை,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், யார்லாங் சாங்போ நதியில், 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டது. அருணாச்சல பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி, நம் நாட்டில் பிரம்மபுத்ரா என, அழைக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளாக திட்டமிடப்பட்டிருந்த அணை கட்டும் பணி, சமீபத்தில் துவங்கியது. இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

திபெத்தில் பிரமாண்ட அணையை சீனா கட்டுவது குறித்து தற்போதைக்கு கவலைப்பட வேண்டாம். பிரம்மபுத்ரா, ஓர் வலிமையான நதி. இது, ஒரு நீர் ஆதாரத்தை மட்டும் சார்ந்து இல்லை.

அருணாச்சல பிரதேசம், பூடான் மற்றும் அசாமில் இருந்தும் அந்த நதி நீரை பெறுகிறது. பிரம்மபுத்திராவின் ஓட்டத்தை சீனா தொந்தரவு செய்தால், தண்ணீர் வரத்து குறையும். இதன் விளைவாக பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படு ம்.

ஆனால் குறைவான தண்ணீர் வந்தால், அது வெள்ள நிவாரணியாகவும் செயல்படும் என்ற எதிர் கருத்தும் உள்ளது.

பிரமாண்ட அணை குறித்து, சீனாவுடனும், நம் அண்டை நாடுகளுடனும் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement