எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 2வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்!

9

புதுடில்லி: எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2வது நாளாக பார்லிமென்ட் முடங்கியது.


பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 22) 2வது நாளாக பார்லிமென்ட் கூடியது. லோக்சபா காலை 11 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அவையை பிற்பகல் 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பிறகு அவை கூடிய போது அமளி தொடர்ந்ததால், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா பிறகு நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.



அதேபோல், ராஜ்யசபா கூடியதும், அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்த விவகாரம் குறித்து எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் பிற்பகல் 12 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.


எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்து அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் 2வது நாளாக முடங்கி உள்ளது.

Advertisement