மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி

29


கும்பகோணம்: ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.


கும்பகோணத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், இ.பி.எஸ்., பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் இல்லை. மக்கள் சேவையில் முதன்மையான கட்சி என்றால் அ.தி.மு.க., தான். ஆட்சிக்கு வந்த பின் நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.


கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில்
விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது. முடிந்த அளவுக்கு உங்களுக்கு நன்மை செய்யும் விதமாக, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.


பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழ வைக்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும். அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

Advertisement