சிந்தனைக்களம்: ஹிந்து பண்பாட்டு கருத்துகள் சொல்லும் திருக்குறள்

திருக்குறள் உலகம் முழுதும் சென்று தமிழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிற நுால். 2,000 ஆண்டுகள் ஆகியும் கூட காலத்தால் வெல்ல முடியாத ஓர் அரிய இலக்கியம். திருக்குறளின் வெற்றியை பார்த்த பலரும் அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, திருக்குறள் ஒரு கிறிஸ்துவ இலக்கியம் என்று நிரூபிக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் திருக்குறளை முழுமையாக படித்தவர்கள், புரிந்து கொண்டவர்கள், அது ஒரு ஹிந்து இலக்கியம் தான் என்பதில் ஐயம் கொள்ள மாட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவுக்கு, 31 ஆண்டுகள் முன்னதாக பிறந்தவர் திருவள்ளுவர் என்று மறைமலையடிகள் கூறினார். அவரது இந்த ஆராய்ச்சிக் கருத்தை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஏற்றுக் கொண்டார். அப்போதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒரு கருத்தை உருவாக்கினர்.
ஆனால் சில அறிஞர்கள், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த செயின்ட் தாமஸை திருவள்ளுவர் சந்தித்ததாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுகின்றனர்.
இயேசு கிறிஸ்துவே திருவள்ளுவருக்கு, 31 ஆண்டுகள் பின்னால் பிறந்தவர் என்பது உண்மையானால், செயின்ட் தாமஸை பார்த்துதான் திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் என்பது எத்தனை பெரிய கட்டுக்கதை.
இதை, ஆமாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், இன்றைய தி.மு.க.,வுக்கு எந்தப் புரிதலும் இல்லை என்றே பொருள்.
உங்களின் முன்னோடி ஈ.வெ.ரா., திருக்குறள் பற்றி என்னவெல்லாம் கூறி இருக்கிறார். 'எந்த தமிழ் இலக்கியங்கள் மீதும் அவருக்கு மரியாதை இருந்ததில்லை. ஆனாலும் அவரை தந்தை என்று கொண்டாடுகிறீர்களே. யாருக்கும் வெட்கமில்லை' என துக்ளக் சோ சொன்னாரே... அது தி.மு.க.,வுக்குத்தான் பொருந்தும்.
திருக்குறளில் கைவைப்பதேன் நம் நாட்டின் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறளை, போற்றுதலுக்குரிய தமிழறிஞர்களை எப்படிப்பட்ட வார்த்தைகளால் இவர்கள் அர்ச்சனை செய்தனர். அதன் விளைவையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அழிவுப்பாதை தமிழகத்தில் தொடர்ந்து நடக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இவர்கள் ஏன் திருக்குறள் மேல் கைவைக்கின்றனர். திருக்குறளில் ஹிந்துத்துவ சிந்தனைதான் தலைசிறந்து நிற்கிறது.
பொதுவாக, 'எல்லோருக்கும் ஏற்றவனாக இருந்துட்டு போகணும்' என வள்ளுவர் நினைத்ததே, இவர்களெல்லாம் சொந்தம் கொண்டாடுவதற்கு காரணம் என்று கருதுகிறேன்.
திருக்குறளில், 'தாமரைக் கண்ணன்' என வருகிறது. அவர் யார். நாம் சொல்லும் சீதேவி, பூதேவி பற்றி திருக்குறளில் சொல்கிறார். அதுவும் கிறிஸ்துவத்தில் உள்ளதா.
இந்திரன் பற்றியும், வாமனன் அவதாரம் பற்றியும் திருவள்ளுவர் சொல்கிறார். 'ஒருமைக்கும் தான் பெற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து' என்று சொல்கிறார். ஏழு பிறப்புகள் இருக்கிறது என்பது கிறிஸ்துவ கருத்தா.
அறம், பொருள், இன்பம் பற்றி திருக்குறள் சொல்கிறது. இந்தியா தவிர உலகின் எந்த நாட்டின் பண்பாடும், நாகரிகமும், அதை உள்ளடக்கமாகக் கொண்டதில்லை. அதை ஏற்ற ஒரே பண்பாடு ஹிந்து பண்பாடு. அறத்துப் பாலின் இறுதி அதிகாரத்தில், ஊழ்வினைப் பற்றி சொல்லப்பட்டுஉள்ளது.
ஊழ்வினையை ஏற்கும் எந்த வெளிநாட்டு சித்தாந்தமும் உலகில் இல்லை. திருக்குறள் மட்டுமே ஊழ்வினையை ஏற்கிறது. ஏழு பிறவிகள் பற்றி சொல்வது ஹிந்துத்துவ சிந்தனை.
இது கிறிஸ்துவம், முஸ்லிம் உட்பட எந்த நாகரிகத்திலும் கிடையாது. இது எப்படி உலகப் பொதுமறையாகும் எனத் தெரியவில்லை. ஒருவேளை திருக்குறளுக்கு உலகப் பொதுமறை அந்தஸ்து கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டால், ஹிந்துத்துவ சிந்தனையைத்தான் உலகப் பொதுமறை என்று நாம் ஏற்க வேண்டும்.
யார் ஹிந்து இந்திய இலக்கியங்கள் திரும்பத் திரும்ப சொல்வது நான்கே நான்குதான். அறம், பொருள், இன்பம், வீடு. வடமொழியில் சொல்வதென்றால், தர்ம, அர்த்த, காம, மோட்ஷ' என்பவை. அங்கு காளிதாசனும், சாணக்கியனும், வேதங்களும், உபநிடதங்களும் சொன்னதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இளங்கோவடிகளும் அறம், பொருள், இன்பம், வீடு என்பதற்குள்தான் சிலப்பதிகாரத்தை எழுதியுள்ளார்.
அறம், பொருள், இன்பம் என்றுதானே உள்ளது. வீடு இல்லையே என்று கேட்கலாம். வீடு என்பது இந்த மூன்று பால்களிலும் விரவிக் கிடப்பதுதான் என்று திரு.வி.க., சொல்கிறார். இதை அங்கங்கே திருத்தி, வியாக்கியானம் கொடுத்து, இதை கிறிஸ்துவ நுால் என்று நிரூபிக்க முயற்சி நடக்கிறது.
ஆனால், திருவள்ளுவர் ஹிந்து இல்லையென்றால் வேறு யார் ஹிந்து என்று கேட்கும் நிலைதான் உள்ளது. இப்படித்தான் ராமகிருஷ்ண மடமே ஹிந்து இல்லை என்று ஒரு வாதத்தை வைத்தனர்.
விவேகானந்தர் ஹிந்து இல்லையெனில் யார்தான் ஹிந்து. அப்படி இந்த நாட்டில், 'ஹிந்து மதத்திற்கு எதிரான அநியாயம் அதாவது டி ஹிந்துவைசேஷன்' நடந்து கொண்டிருக்கிறது. இந்த வார்த்தை மிக முக்கியமானது. ஹிந்துவை ஹிந்துவாக இருக்கச் செய்யாத ஒரு சித்தாந்தம், 200 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஹிந்துக்களுக்கு அபாயம் அதை வளர்த்தெடுக்கும் சிந்தனையாளர்கள் தான், தி.க., - தி.மு.க., - இடதுசாரிகள் - பொதுவுடைமை பேசுவோர். அவர்கள் அதை முன்னெடுத்துச் செல்லும் சக்திகளாக உள்ளனர். இந்த அபாயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தனக்கு இருக்கிற ஒரு அபாயத்தையே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறது ஹிந்து சமுதாயம்.
டைனோசர் என்று ஒரு பெரிய மிருகம் இருந்தது. அது அழிந்துவிட்டது. ஏன் அது அழிந்தது. மிக பிரமாண்ட மான மிருகம். அதன் முன்னால் யாரும் நிற்க முடியாது.
ஆனால், அதன் வாலை இன்னொரு மிருகம் கடித்து உண்டால், அதை உணர்வதற்கே
டைனோசருக்கு மூன்று மணி நேரமாகுமாம். தெரியவரும் போது வால் காணாமல் போயிருக்கும்.
அதுபோல பிரமாண்டமான ஹிந்து சமுதாயம், தனக்கொரு அபாயம் இருப்பதை புரிந்து கொள்ளவே, 300 ஆண்டுகள் ஆகும் என்றால், உங்களை நாங்கள் துாங்க விடமாட்டோம். அதை உங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்வதற்கு தான் ஹிந்து இயக்கங்கள், சாதுக்கள், சன்னியாசிகள் போன்றோர் இருக்கிறோம்.
ஒரு கிறிஸ்துவ பாதிரியார், தியாகராஜ செட்டியாரை பார்க்க திருச்சி உறையூருக்கு சென்றார். அவரிடம், 'திருவள்ளுவர் திருக்குறளை தவறாக எழுதிவிட்டார். பல இடங்களில் எதுகை, மோனை இடிக்கிறது.
அதனால் அதை நான் மாற்றி எழுதியுள்ளேன் என்றார். தியாகராஜ செட்டியார் ஆச்சரியப்பட்டு, துள்ளிக்குதித்து எழுந்தார். என்னய்யா சொல்கிறீங்க? என்று கேட்டார்.
இங்கே பாருங்கள், 'தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்று கூறி, தக்கார் எனப்படுவதற்கும், எச்சத்தால் என்பதற்கும் எதுகை சரியாக வரவில்லை.
அதனால் அதை மாற்றி எழுதியுள்ளேன். 'தக்கார் தகவிலார் என்பது அவரவர் மக்களால் காணப்படும்' என எழுதியுள்ளேன் என்று கூறினார்.
துடித்துப்போன தியாகராஜ செட்டியார், 'இந்த இடத்தை உடனே காலி பண்ணு. இல்லையென்றால் என்ன நடக்கும்னே எனக்குத் தெரியாது. என் மீது கொலை வழக்கு போட வைத்து விடாதே என்று விரட்டிவிட்டார்.
திருக்குறளில் திரிபுவாதம் அதேபோல மதுரை பாண்டித்துரைத் தேவரிடமும் ஒரு கிறிஸ்துவ பாதிரியார் சென்றார்.
ஆயிரக்கணக்கில் திருக்குறளை அச்சிட்டு கொண்டு போய் கொடுத்தார். பாதிரியார் கூறுகையில், 'முதல் குறளையே வள்ளுவர் தவறாக எழுதியதாக கூறினார்.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதல்ல. 'ஆதிபகவன் என வரக்கூடாது . ஆதிசிகரம் என ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்துள்ளேன். எனவே 'ஆதிசிகரம் முதற்றே உலகு' என்று திருத்தி இருப்பதாகக் கூறினார்.
பாண்டித்துரைத் தேவர் கோபப்படாமல், நீங்கள் எத்தனை புத்தகத்தில் இப்படி திருத்தி எழுதியுள்ளீர்கள் என்று அமைதியாகக் கேட்டார். அவர் ஆயிரம் புத்தகம் அச்சிட்டதாக பதிலளித்தார். அவரது ஒரிஜினல் புத்தகம் உட்பட அனைத்தையும் விலைக்கு தாருங்கள் என்று கேட்டார்.
அத்தனைப் பிரதிகளையும் வாங்கி, அந்தப் பாதிரியார் கண்முன்னால் தீவைத்து எரித்தார் பாண்டித்துரைத் தேவர். அவர் தமிழுக்கு என்ன தொண்டு செய்தார் என்றால், திரிபுவாதம் செய்து, திருத்தி எழுதிய திருக்குறளை தீயிட்டு கொளுத்தியதுதான் பாண்டித்துரை தேவரின் சிறப்பு.
இப்படி நம் மகத்தான முன்னோர்கள் திருக்குறளை காப்பாற்றி இருக்கின்றனர். அதன் பொருள் சிதையாமல் காலம் காலமாய் கொண்டு வந்திருக்கின்றனர். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை நான் ஏற்கவில்லை.
திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துகளை, உலகத்தின் அனைத்து சமய நம்பிக்கைகளும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே திருக்குறள் ஓர் ஹிந்து இலக்கியம்தான்.
- இராம ஸ்ரீநிவாசன்
மாநில பொதுச்செயலர், பா.ஜ.,
raamasrinivasan@gmail.com












மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்