குழந்தையுடன் எரித்து கொல்ல முயற்சி காதலன் மீது இளம்பெண் 'திடுக்' புகார்

தொட்டபல்லாபூர்: குழந்தையுடன் தன்னை எரித்துக் கொல்ல முயன்றதாக, காதலன் குடும்பத்தினர் மீது இளம்பெண், போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் அருகே கரேனஹள்ளியை சேர்ந்தவர் கவுதம், 30. தொட்டபல்லாபூரில், 'ஜிம்' நடத்துகிறார். கவுதமும், கரேனஹள்ளி கிராமத்தின் பவித்ரா, 27 என்பவரும், கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்தனர்.

திருமண ஆசை காட்டி காதலியுடன், கவுதம் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் அவர் கருவுற்றார். அதன்பின், காதலியை திருமணம் செய்ய கவுதம் மறுத்தார். இதுபற்றி காதலி, போலீசில் புகார் செய்யவில்லை.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கு, மூன்று மாதங்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. பவித்ரா, தன் பெற்றோர் வீட்டில் வசித்தார்.

இந்நிலையில் கவுதம், இன்னொரு இளம்பெண்ணை காதலித்ததுடன், அவருடன் சேர்ந்து ஊர் சுற்றினார்.

இதுபற்றி அறிந்த பவித்ரா, கவுதம் மீது போலீசில் புகார் செய்தார். 20 நாட்களுக்கு முன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கவுதம், அவரது குடும்பத்தினர், பவித்ராவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினர்.

பவித்ராவையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை ஒரு அறையில் தங்க வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு, பவித்ரா தங்கி இருந்த அறையில் தீப்பிடித்தது. குழந்தையுடன் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்.

இதையடுத்து தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையம் சென்ற அவர், தன்னையும், குழந்தையையும் எரித்துக் கொல்ல முயன்றதாக கவுதம், அவரது குடும்பத்தினர் மீது புகார் செய்தார். அவர்கள் மீது வழக்குப் பதிவானது.

'பவித்ராவையும், குழந்தையையும் கொல்ல நாங்கள் முயற்சிக்கவில்லை. பவித்ரா கூறியதால், அவரது உறவினர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து தீ வைத்தனர்' என, கவுதம் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்ததால் 25 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினர். பவித்ரா மீது புகார் செய்தனர். இந்த புகாரின் மீதும் விசாரணை நடக்கிறது.

Advertisement