தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகத்தில் குத்து; மேலிடத்தில் புகார்

2


தமிழக இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு, சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், அதிக ஓட்டுகள் பெற்ற, 28 வயது சூர்ய பிரகாஷ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு அடுத்தபடியாக வந்த, அருண் பாஸ்கர், தினேஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தில் மூத்தவர்கள் என்பதால், தங்களை விட குறைந்த வயது கொண்ட சூர்ய பிரகாஷ் தலைமையை ஏற்கவில்லை.



இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில், நேற்று முன்தினம், 'சக்தி அபியான்' என்ற அமைப்பின் சார்பில், பெண்களுக்கான தலைமை பண்பு குறித்த மாநில மாநாடு நடந்தது.இதில் பங்கேற்க, இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய்பானு வந்திருந்தார். அவருக்கு சூர்ய பிரகாஷ் தலைமையில், இளைஞர் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.



மாநாடு முடிந்து, டில்லிக்கு உதய்பானு செல்வதற்கு முன், அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி செயலரும், புதுச்சேரி மேலிட பொறுப்பாளருமான ஜோஸ்வா, தன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்க அழைத்தார்.


ஆனால், உதய்பானு விருந்துக்கு செல்லாமல், விமான நிலையம் சென்று விட்டார். அவரை சூர்யபிரகாஷ் வழி அனுப்பி வைத்துள்ளார். அப்போது, ஜோஸ்வா வீட்டிற்கு உதய்பானு வராததால் அதிருப்தி அடைந்த, 'ஜவஹர் பால் மன்ச்' அமைப்பின் தேசிய நிர்வாகி ஒருவர், சூர்ய பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முகத்தில் குத்து விட்டுள்ளார்.


இது தொடர்பாக, சூர்ய பிரகாஷ் ஆதரவாளர்கள், இளைஞர் காங்கிரஸ் டில்லி மேலிடத்திற்கு, புகார் அனுப்பி உள்ளனர். இது குறித்து, இளைஞர் காங்கிரசை சேர்ந்த தலைவர் ஒருவர் டில்லியில் இருந்து தமிழகம் வந்து விசாரிக்க உள்ளார்.
நமது நிருபர்

Advertisement