மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

34

சென்னை: மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.


@1brஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;


மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தி.மு.க., அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.


தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் தி.மு.க., கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே தி.மு.க.,வினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்பு சப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.


அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, தி.மு.க., அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement