3வது நாளாக முடங்கியது பார்லி.,: இரு அவைகளும் ஒத்திவைப்பு

16


புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.


பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.


லோக்சபா, ராஜ்யசபாவில் நேற்றும் அலுவல்கள் நடக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் மற்றும் ஜீரோ நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின.

பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டு, சபைகளை முடக்கினர்.
இந்நிலையில், இன்றும் (ஜூலை 23) லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 3வது நாளாக பார்லிமென்ட் முடங்கியது.

Advertisement