மும்பை தாக்குதல் சம்பவத்தில் டேவிட் ஹெட்லிக்கு ராணா உதவியது எப்படி: குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தகவல்!

2

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் பங்கு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2008ம் ஆண்டு நவ., மாதம் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதனை திட்டமிட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவருக்கும், லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடாவை சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா மீது குற்றம்சாட்டப்பட்டது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை, மத்திய அரசு கோரிக்கைப்படி அமெரிக்கா நாடு கடத்தியது. தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


இந்நிலையில் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு துணை குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: டேவிட் ஹெட்லியை ஆதரிப்பதிலும், அவர் மும்பை முழுவதும் உளவு பார்ப்பதற்கு தேவையான உதவி செய்திலும் தஹாவூர் ராணாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் உளவு பார்ப்பதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.


மும்பையில் கார்ப்பரேட் அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் மும்பை தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ராணாவின் பங்கு முக்கியமானது.தொழில் செய்வதாக கூறி குடியேற்ற சட்ட மையம் ஒன்றை ராணா ஏற்படுத்தினாலும் அங்கு எந்த வேலையும் நடக்கவில்லை. அங்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை. வருமானமும் இல்லை. இருப்பினும் ஹெட்லியின் சதிச்செயலுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கியது. மும்பையின் முக்கியமான இடங்களுக்கு சென்று ஹெட்லி உளவு பார்ப்பதில் தேவையான உதவிகள் இங்கிருந்து கிடைத்தது.

இந்த தாக்குதல் நடத்துவதற்கு மிகப்பெரிய சதிச்செயலை பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் சேர்ந்து 2005 முதல் ராணா செய்து வந்தார். பெரிய அளவில் தாக்குதல் நடத்தி, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை அழித்து, இந்திய அரசுக்கு எதிராக போர் புரிவது என்ற சதிச்செயலை அவர்கள் திட்டமிட்டனர். நாட்டின் நலனுக்கு எதிராகவும் இந்திய மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தும் வகையில் ராணாவின் சதிச்செயல்கள் இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement