அங்கன்வாடி வளாகம் சுத்தமானது!

திருப்பூர்; மலம் வீசப்பட்டிருந்த காசிபாளையம், ஏ.டி., காலனி அங்கன்வாடி மைய வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி, காசிபாளையம் ஏ.டி., காலனியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையம் அமைந்துள்ள இடத்தில் மேல்நிலை தொட்டியும் உள்ளது. தொட்டிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோத நபர்கள் நடமாட்டம் காணப்படுகிறது. மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி விட்டு, அங்கன்வாடி மையம் முன், தொட்டி அருகே வீசி செல்கின்றனர்.

கடந்த இரண்டு நாள் முன், அங்கன்வாடி மையம் முன் மற்றும் தொட்டியின் கீழ், சமூக விரோதிகள் மலத்தை வீசி சென்றிருந்தனர். இதுதொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தனர். வளாகத்தில் சுகாதார கேடாக இருந்தை உடனடியாக துாய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து, பிளிச்சிங் பவுடர் துாவினர். இப்பிரச்னையினால், குடிநீர் தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைக்க உயரதிகாரிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கன்வாடி மையம், குடிநீர்தொட்டி அருகே மலத்தை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement