மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே லாரி டிரைவரிடம், மிளகாய் பொடி துாவி ரூ.10.40 லட்சம் பணம் பறித்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி, 32; லாரி டிரைவர். இவர், கடந்த 22ம் தேதி, வேலை செய்யும் வானகரம் ஏ.வி.பி., முட்டை வியாபார கம்பெனியிலிருந்து நாமக்கல் சென்று முட்டை லோடு ஏற்றி வர, ரூ.10.40 லட்சம் பணத்துடன் சென்றார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்தியுள்ளார்.

அப்போது, காரில் வந்த சிலர், அவர் முகத்தில் மிளகாய் பொடி துாவிவிட்டு லாரியிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகினர்.

இது குறித்து டி.எஸ்.பி., சரவணன் மற்றும் அவரது குழுவினர், டோல் பிளாசாக்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, லாரியை சென்னையில் இருந்து, இன்னோவா கார் ஒன்று பின் தொடர்ந்து வந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அந்த கார் சென்னை, கோயம்பேடு கெஸ்ட் ஹவுஸ் எதிரில் நின்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு தங்கியிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், ஏ.வி.பி., முட்டை கம்பெனியில் ஏற்கனவே டிரைவராக வேலை செய்த திருநெல்வேலி கீழகருவேலன்குளம், களக்காட்டை சேர்ந்த பிரவீன் கோயில்ராஜ், 32; என்பவர் லாரியை பின் தொடர்ந்து பணம் பறித்தது தெரியவந்தது.

அவருடன், சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சதீஷ்,40; மாடம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார், 40; இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார், 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 9.50 லட்சம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சசம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டு பிடித்த போலீசாரை எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.

Advertisement