மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பள்ளிக்கு சென்ற மாணவியை, முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், வழிமறித்து பிளேடால் கையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மாணவியை வழிமறித்து அவரது கையில் பிளேடால் கிழித்து, கன்னத்தில் தாக்கினர்.

உடன், திடுக்கிட்ட மாணவி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர்.

தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement