போதை பொருள் வைத்திருந்த ராஜஸ்தான் வாலிபர் கைது

சென்னை, வேப்பேரி போலீசார், கொக்கைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த ராஜஸ்தான் வாலிபரை நேற்று கைது செய்தனர்.

வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஈ.வி.கே.,சம்பத் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

இதில், 7 கிராம் கொக்கைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சவுரவ் ல்யூக்டு, 36 என்பது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 7 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், அண்ணாநகரில் போதைப் பொருள் வைத்திருந்த, தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, மேடவாக்கத்தைச் சேர்ந்த முகமது அசாருதின், 29 ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இரு மொபைல்போன்கள், ஒரு கே.டி.எம்.,பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement