'அரசு திட்டங்களை விமர்சிப்பதே எதிர்க்கட்சிகள் வேலை'

பெரம்பூர், ''அரசின் திட்டங்களை விமர்சிப்பதே எதிர்கட்சிகளின் வேலை,'' என, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.

பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதில், திரு.வி.க.நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., 'தாயகம்' கவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

மேயர் பிரியா அளித்த பேட்டி:

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலங்களிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமிற்கு, மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் வருகின்றன. மனுக்களின் அடிப்படையில், மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மெரினா கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விரைவில், மெரினா கடற்கரை பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு வரும்.

அரசின் திட்டங்களை விமர்சிப்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. எந்த ஒரு முதல்வரும் எடுக்காத முன்னெடுப்பை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக முதல்வர் எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement