பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு மாற ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்படி, அதிகாரிகள் நெருக்கடி தருவதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில், 2003 ஏப்ரலுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், பொது வைப்பு நிதி திட்டமான ஜி.பி.எப்.,பில் உள்ளனர். 2003 ஏப்ரல் 1க்கு பின் நியமனம் பெற்றவர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ்.,சில் சேர்க்கப்பட்டனர்.
பிரதான கோரிக்கை அப்போது முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கை, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான்.
கல்வித் துறையில் ஆசிரியர்கள் விபரம் குறித்து, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில், ஆசிரியர்களின் அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான சாப்ட்வேரில், 2003 ஏப்ரல் 1க்கு பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களை, சி.பி.எஸ்., திட்டத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.
இந்த சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய முடியாத 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2003 முதல் தற்போது வரை ஜி.பி.எப்., திட்டத்தில் இருந்துஉள்ளனர். வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட பண பலன்களை பெற்று வந்தாலும், அவர்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் அழைத்து, 'நீங்கள் 2003, ஏப்., 1க்கு பின் நியமிக்கப்பட்டு உள்ளதால், சி.பி.எஸ்.,சுக்கு தான் மாற வேண்டும். கல்வித் துறைக்கு கடிதம் கொடுங்கள் அவசரம்' என கட்டாயப்படுத்த துவங்கியுள்ளனர்.
இதனால், 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,பில் இருந்தவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
கண்டிக்கத்தக்கது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:
ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,சில் பதிவேற்றம் செய்யும் சாப்ட்வேரில் திருத்தத்தை கல்வித்துறை செய்யாமல், ஜி.பி.எப்.,பில் பயன் பெறுவோரை, 'சி.பி.எஸ்.,சுக்கு மாறுங்கள்' என கடிதம் கேட்டு கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
கடந்த, 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,பில் தொடர்ந்தபோது கல்வித்துறை 'கோமா'விலா இருந்தது? இவ்விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை நீதிமன்றத்திற்கு அலைய விடாமல், பொதுவான உத்தரவை கல்வி அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --