பல கேள்விகளை எழுப்பியுள்ள ஜக்தீப் தன்கரின் ராஜினாமா!

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி துவங்கிய நிலையில், துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், அன்றைய தினம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜ்யசபா தலைவரான அவர், தன் ராஜினாமா தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், 'உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால், டாக்டர்களின் ஆலோசனையை பின்பற்றுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் விளக்கமும், பார்லிமென்ட் கூடிய நேரத்தில் பதவி விலகுவதாக அவர் அறிவித்ததும், பல தரப்பிலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்து பின், ராஜ்யசபா தலைவராக, அதாவது, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் தன்கர். இவர் கவர்னராக இருந்த காலத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், இவருக்கும் கடும் மோதல் நீடித்தது. மம்தாவுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருந்தார் என்று சொன்னால், யாரும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்டவர், 2022ம் ஆண்டில், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவிக்காலம், 2027 ஆகஸ்ட் மாதம் தான் முடிவடைகிறது. அதற்கு இன்னும் இரண்டாண்டுகள் உள்ள நிலையில் தான் ராஜினாமா செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அடுத்த சில நாட்களுக்கான ராஜ்யசபா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பது தொடர்பான விபரங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜினாமா செய்துள்ளது தான், பல்வேறு கேள்வி களை எழுப்பியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக, ராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்தால், அடுத்த சில நாட்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்க எப்படி சம்மதித்திருப்பார் என்ற சந்தேகமும் எழுகிறது.

இதை கருத்தில் வைத்தே, 'ஜக்தீப் தன்கர் ராஜினாமா பின்னணியில் அவரை இயக்கியது யார்?' என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கேட்டுள்ளார்.

கடந்த 1950ல் இருந்து இதுவரை, 14 பேர் துணை ஜனாதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். அவர்களில் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த மூன்றாவது துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர். இதற்கு முன், வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தனர். தன்கர் மட்டுமே உடல்நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளான யஷ்வந்த் வர்மா மற்றும் சேகர் குமார் வர்மாவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர முற்பட்டன. இந்த தீர்மானத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

இத்தீர்மானத்தை கையாண்ட விவகாரம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஜகதீப் தன்கர் தெரிவித்த சில கருத்துக்கள், மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் சிலரது தரப்பில் கூறப்படுகிறது.

அதற்கேற்ற வகையில், 'தன்கர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்' என, பிரதமர் மோடி மட்டும் சிறிய அறிக்கை ஒன்றில் தெரிவித்ததை தவிர, மத்திய அரசு தரப்பிலோ, ஆளும் பா.ஜ., தரப்பிலோ எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாததும், இவை எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

மேற்கு வங்க கவர்னர் மற்றும் ராஜ்யசபா தலைவராக இருந்த போது, மத்திய அரசுக்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தன்கர். அதனால் தான், எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.

அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நபர், திடீரென பதவி விலகியதும் தான், பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. இருந்தாலும், நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சட்ட பதவியான, துணை ஜனாதிபதி பதவி வகித்தவர் உடல்நலத்தை காரணம் காட்டி பதவி விலகிய பின், அதுதொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவுவது நாட்டிற்கு நல்லதல்ல. ராஜினாமா தொடர்பாக அவரே விளக்கம் அளித்து விட்டதால், யூகங்களை முடிவுக்கு கொண்டு வருவதே நல்லது.

Advertisement